சேலம்: சேலத்தில் பியூட்டி பார்லர் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் உடலை அடைத்து வைத்த வழக்கில், அவரின் ரகசிய காதலனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான 2 பெண் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் முகமது சதாம். இவரது மனைவி தேஜ்மண்டல் (26), மாற்றுத்திறனாளியான இவர் அழகு கலை நிபுணர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திற்கு வந்த தேஜ்மண்டல், அழகாபுரம் பகுதியில் பியூட்டி பார்லர் மற்றும் ஸ்பா என்னும் மசாஜ் சென்டர் தொடங்கியுள்ளார். பின்னர், பள்ளப்பட்டி, சங்கர்நகர் பகுதியில் 2 பியூட்டி பார்லர், மசாஜ் சென்டரை ஆரம்பித்து நடத்தி வந்தார். சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசன் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் தேஜ்மண்டல், வாடகைக்கு 2 வீடுகளை எடுத்து தங்கியிருந்தார். ஒரு வீட்டில் அவரும், மற்றொரு வீட்டில் தனது பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்த 2 பெண், ஒரு ஆண் ஆகியோரும் தங்கியுள்ளனர். தேஜ்மண்டலின் வீட்டிற்கு சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பிரதாப் என்பவர் அடிக்கடி வந்துச் சென்றுள்ளார். தன்னை அவரின் கணவர் எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை பிரதாப், வீட்டு உரிமையாளரான அதிமுக பிரமுகர் நடேசனுக்கு போன் செய்து, தனது மனைவி தேஜ்மண்டல் போனை எடுக்கவில்லை. அதனால், வீட்டில் சென்று பாருங்கள் எனக்கூறியுள்ளார். உடனே அவர் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது. ஆனால், வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் கொண்ட நடேசன் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமின் சிலாப்பில் ஒரு பெரிய சூட்கேஸ் இருந்துள்ளது. அதனுள் இருந்து துர்நாற்றம் வருவதை கண்டறிந்தனர். உடனே அதனை இறக்கி திறந்து பார்த்தனர். உள்ளே தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டு, அரை நிர்வாண நிலையில் சடலமாக சுருட்டி வைக்கப்பட்டிருந்தார். உடல் அழுகி காணப்பட்டது. மோப்பநாய், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அப்போது, பக்கத்திலேயே தேஜ்மண்டல் வாடகைக்கு எடுத்திருந்த மற்றொரு வீட்டை போலீஸ் அதிகாரிகள் பார்த்தனர். அங்கு தங்கியிருந்த 2 பெண் உள்ளிட்ட 3 பேரும் இல்லை. வீடு பூட்டப்பட்டுக் கிடந்தது.