கூடலூர்: கூடலூர் வனப்பகுதியில் ஆட்கொல்லி புலி வனத்துறையினர் கண்ணில் தென்பட்டும் மயக்க ஊசி செலுத்த முடியாததால் அதனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூடலூர் அடுத்த மசினகுடி வனப்பகுதியில் 4 பேரை அடித்துக் கொன்ற டி23 புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மதுரை ஊராட்சிக்குட்பட்ட கோழி கண்டி பகுதியில் சிசிடிவி கேமராவில் புலியின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.
இதனை தொடர்ந்து இரு மாநில வனத்துறையினர், 5 கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் மயக்க மருந்து செலுத்தும் துப்பாக்கிகள், மருந்துகள், வலைகளுடன் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால், புலி தப்பிவிட்டது. 3 குழுவினர் 19வது நாளாக நேற்று ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக் கொல்லி, மாங்களாஞ்சி பகுதிகள் வழியாக முதுமலை நம்பிகுன்னு செல்லும் வனப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.