கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்ப நகரைச் சேர்ந்த லாரி டிரைவர் இளங்கோவன்(40). இவரது மனைவி கற்பகவல்லி(34). இவர்களுக்கு மகன் சண்முகபாண்டி(8), மகள் தர்ஷினி(7). நேற்று முன்தினம் இரவு கற்பகவல்லி, மகளுடன் அங்குள்ள ஓட்டலுக்கு சென்று சிக்கன் கிரேவி வாங்கி வந்து, வீட்டில் தயார் செய்திருந்த உணவுடன் சாப்பிட்டுள்ளனர். அப்போது வயிறு எரிச்சல் ஏற்பட்டதால் அருகிலுள்ள கடைக்கு சென்று குளிர்பானம் வாங்கி இருவரும் குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. உறவினர்கள் அவர்களை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்குள் தாய், மகள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.