கூட இருப்பவர்களே ரூ.100 கோடின்னா... டி.கே.சிவகுமார் எவ்வளவு சம்பாதிப்பார்? கர்நாடக காங்கிரஸ் செய்திதொடர்பாளர்கள் ஆடியோ வைரல்

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூட இருப்பவர்களே ரூ.100 கோடி சம்பாதிக்கிறாங்கன்னா, அவர் எவ்வளவு சம்பாதிப்பார் என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் காதோடு பேசிக்கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பெங்களூரு காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. செய்தியாளர்களிடம் பேச காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பா, மீடியா ஒருங்கிணைப்பாளர் சலீம் இருவரும் வந்தனர். மீடியாக்கள் வைத்திருந்த மைக் ஆன் ஆகி இருப்பது தெரியாமல், இருவரும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் குறித்து காதோடு ரகசியமாக பேசிக்கொண்டனர். இந்த ஆடியோ அப்படியே பதிவானது. இது சமூக வலைதளங்களில் தற்போது டிெரண்டிங்கில் உள்ளது.

அவர்கள் அப்படி என்னதான் பேசிக்கொண்டார்கள். இதோ முழு விவரம்:

சலீம்: தனியார் நிறுவனங்களில் டி.கே.சிவகுமாரின் முதலீடு 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஹொஸ்பேட்டை அனுமந்தப்பா பெரிய திருடன். இவன் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டருகே உள்ளான்.

உக்ரப்பா: இது எப்படி இருக்கு என்றால்...

சலீம்: பெரிய ஊழல் சார், தோண்டினால் பெருசா வெடிக்கும்.

உக்ரப்பா: நான் ஒன்று சொல்லட்டுமா..

சலீம்: டி.கே.சியுடன் உள்ளவர்களே ரூ.100 கோடி வரை சம்பாதிக்கிறாங்க.. அப்ப அவர் எவ்வளவு சம்பாதிப்பார். வசூல் மன்னன் சார்.

உக்ரப்பா: நாம் சிரமப்பட்டு இவரை தலைவராக்கினோம். ஆனால் அதற்குரிய வகையில் அவர் நடந்து கொள்ளவில்லை.

சலீம்: எப்போதும் உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். லோ பிபியா இருக்குமோ.. இல்ல குடித்துவிட்டு பேசுகிறாரா என்று பத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்கிறார்கள். ஏன் இப்படி உணர்ச்சிவசப்பட்றார். சித்தராமையாவின் உடல்மொழியை பாருங்கள் சார் எப்போதும் சீராக இருக்கும்.

இவ்வாறு உரையாடல் முடிகிறது. காங்கிரஸ் தலைவர் குறித்து அக்கட்சி அலுவலகத்திலேயே சொந்த கட்சி நிர்வாகிகள் காதோடு பேசிக்கொண்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு உக்ரப்பா, சலீமுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: