நவராத்திரி உற்சவத்தையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் தாயார் திருவடி சேவை: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் தாயார் சன்னதி மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் ரங்கநாச்சியார் தினமும் மாலை புறப்பட்டு கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ரங்கநாச்சியார் படிதாண்டா பத்தினி என்ற சிறப்பை கொண்டவர். சாதாரண நாட்களில் இவரது பாதங்கள் தெரியாத வகையிலேயே அலங்காரம் செய்யப்படும்.

ஆனால் நவராத்திரி உற்சவத்தின் 7ம் திருநாள் மட்டும் தாயாரின் பாதங்களை பக்தர்கள் தரிசிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்படும். இதனால் ஆண்டில் ஒரு நாள் மட்டுமே தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். இந்த ஆண்டுக்கான ரங்கநாச்சியார் திருவடி சேவை, தாயார் சன்னதியில் உள்ள கொலு மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதையொட்டி ரங்கநாச்சியார் மாலை 4 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கொலு மண்டபம் வந்தார்.

இரவு 7.30 மணிக்கு ஆரம்பித்து இரவு 9.30 மணிக்கு கொலு முடிவடைந்தது. திருவடி சேவையையொட்டி தாயார் சாய்கொண்டை, கிளிமாலை,  வைரத்தோடு, கையில் தங்க கிளி, பவளமாலை, முத்துச்சரம், காலில் தங்க கொலுசு அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான  பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 11 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

Related Stories: