அதிமுக ஒன்றிய குழு தலைவர் பல லட்சம் ரூபாய் முறைகேடு: திருவள்ளூர் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பல லட்சம் முறைகேடு செய்துள்ளதாக திருவள்ளூர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி உள்ளார். இவர் கொரோனா காலத்தின்போது பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் இருந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல லட்ச ரூபாய் கையாடல் செய்துவருவதாகவும் எனவே தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று 12 ஒன்றிய குழு உறுப்பினர்களில் அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட 9 ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரனிடம் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட 9 ஒன்றியக் குழு உறுப்பினர்களும் மீண்டும் மனு அளித்தனர். இதையடுத்து எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட 9 ஒன்றிய குழு உறுப்பினர்களும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ‘’விரைவில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார். இதையடுத்து வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமாரிடமும் புகார் மனு கொடுத்துள்ளனர். அவர், ‘’ உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார். அப்போது ஒன்றிய திமுக செயலாளர் ரவீந்திரா உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: