ஆதிச்சநல்லூரில் முழுவீச்சில் நடக்கிறது அகழாய்வு பணி

செய்துங்கநல்லூர்: ஆதிச்சநல்லூரில் ஒன்றிய தொல்லியல் துறை சார்பில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் அகழாய்வு பணிகள் கடந்த 10ம் தேதி முதல் மீண்டும் துவங்கி முழுவீச்சில் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படுமென ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு 17 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

ஒன்றிய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளரும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் 10 ஆய்வாளர்கள், 10 பணியாளர்கள் பங்கேற்று அகழாய்வில் தீவிரம் காட்டி வருகின்றனர். மழை காலத்தின் போது பணி தடைபடாமல் இருப்பதற்காகவும், கண்டெடுக்கப்படும் பொருட்களை சேதமடையாமல் பாதுகாக்கவும், அகழாய்வு நடைபெறும் குழிகள் மேல் பிரமாண்ட  கூரை அமைக்கப்பட்டு உள்ளது.

கூடுதலாக இடம் தேர்வு செய்து பணிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வு பணிகள் தொடர்ந்து 3 முதல் 6 மாதம் வரை நடைபெற உள்ளது. இதனிடையே திருச்செந்தூர் வரும் பக்தர்கள் குடும்பமாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணி நடைபெறும் இடத்திற்கு வந்து ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Related Stories: