வாக்கு எண்ணும் மையத்தில் திமுக - அதிமுக மோதல்: கரூர் அருகே பரபரப்பு

கரூர்: கரூர் மாவட்ட கவுன்சிலர் 8வது வார்டில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தாந்தோன்றிமலை மையத்தில் இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. அப்போது வாக்கு பெட்டிகளை டேபிள்  மாற்றி வைத்ததால் திமுக, அதிமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருதரப்பிற்கும்  வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர்  8 பஞ்சாயத்து  வாரியாக வாக்கு எண்ண முடிவு செய்து தேர்தல்  நடத்தும் அலுவலர் மந்த்ராசலம் முன்னிலையில்  வாக்கு எண்ணிக்கை ஒன்றரை மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு துவங்கியது. முதலில் கோயம்பள்ளி ஊராட்சி வாக்குகள் எண்ணப்பட்டது. ஒரு வாக்குசீட்டை பெண் அலுவலர் எடுத்து காட்டினார்.

அப்போது சின்னத்தில் சரிவர சீல் இல்லை. இதனால் இந்த  ஓட்டு சந்தேகம் என அறிவித்தார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு  தெரிவித்தனர். திமுகவினர் ஆமோதித்தனர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பும் உருவானது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் வாக்கு எண்ணும் மையத்தில்  பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து தகராறை விலக்கி விட்டனர். இதையடுத்து செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் 100க்கும் மேற்பட்ட  போலீசார் குவிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. 

Related Stories: