பவானிசாகர் அருகே இன்று விபத்து: பஸ், பைக் மோதி 2 தொழிலாளர்கள் பலி

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தனியார் மில் பஸ் மற்றும் பைக் மோதிய விபத்தில் வாலிபர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மகன் மெர்வின் (21), அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திக் (24), 2 பேரும் கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு தினமும் பைக்கில் வேலைக்கு செல்வது வழக்கம்.

இன்று காலை வழக்கம் போல் பைக்கில் பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். தொப்பம்பாளையம் கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பவானிசாகர் நோக்கி வந்த தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக பைக் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் சென்ற 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பஸ்-பைக் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: