கரூர் அருகே அதிகாலை பயங்கரம் பிரபல ரவுடி வெட்டி படுகொலை: மர்ம கும்பலுக்கு வலை

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே லாலாப்பேட்டை கருப்பத்தூரை சேர்ந்தவர் கோபால் (52). இவரது மனைவி பொன்மணி. இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போடுவதற்காக கோபால் சென்றுள்ளார். அப்போது அருகில் வாழைத்தோப்பில் பதுங்கியிருந்த மர்மகும்பல் அவரை சுற்றி வளைத்து கால், தோள் பட்டை, தலை மற்றும் முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதில் கோபால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கரூர் எஸ்பி சுந்தரவடிவேல் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடந்த 2006ல் கருப்பத்தூரில் உள்ள கோபாலுக்கு சொந்தமான தோப்பில் வெடிகுண்டு தயாரித்த வழக்கு உள்பட பல்வேறு மாவட்டங்களில் 35 வழக்குகள் கோபால் மீது உள்ளது. முன்விரோதத்தில் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Related Stories: