முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க காக்களூர் ஏரியில் மக்கள் குவிந்தனர்

திருவள்ளூர்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க காக்களூர் ஏரிக்கரையில் நேற்று மக்கள் குவிந்தனர். மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் கோயில் குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் வருவார்கள் என்பதால் நேற்றுமுன்தினம் மாலை முதல் நேற்று இரவு 8 மணி வரை சாமி தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க கோயில் சுற்றுப்புற பகுதி மற்றும் காக்களூர் பாதாள விநாயகர் கோயில் ஏரிக்கரை உள்ளிட்ட பகுதியில் குவிந்தனர்.

அப்போது அந்த பகுதியில் மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் குறைந்தளவே புரோகிதர்கள் இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் காக்களூர் ஏரிக்கரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் ஸ்ரீவைத்தியவீரராகவ பெருமாள் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டதால் நுழைவாயிலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து கோபுர தரிசனம் செய்துவிட்டு சென்றனர். திருவள்ளூர் எஸ்பி வீ.வருண்குமார் உத்தரவின்படி, டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்ஐ சுரேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: