ஜெர்மன், அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல்

ஸ்டாக்ஹோம்: மூலக்கூறு உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை கண்டுபிடித்ததற்காக ஜெர்மன், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசு முறையே திங்கள், செவ்வாயன்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸின் பொதுச்செயலாளர் கோரன் ஹான்சன் அறிவித்தார். அதன்படி, ‘சமச்சீரற்ற ஆர்கனோகாடாலிசிஸ்’ என்றழைக்கப்படும் மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான புதிய வழிமுறையை கண்டுபிடித்ததற்காக ஜெர்மன் விஞ்ஞானி பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் அமெரிக்க விஞ்ஞானி டேவிட் மேக்மில்லனுக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருது தங்கப்பதக்கம் மற்றும் ரூ.8 கோடி ரொக்கப்பரிசு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: