உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலின் படி திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5மணி முதல் இரவு 8மணி வரை, 250, 100, 20 ஆகிய கட்டண தரிசனத்திலும், பொதுதரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 250, 100 ஆகிய கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருப்பதாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில் அண்மையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெண்கள், கோயிலில் திருப்திகரமாக தரிசனம் செய்ய முடியவில்லை என குறைகளை சுட்டிக்காட்டி முதல்வர், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து இணைஆணையர் மற்றும் உள்துறை அதிகாரிகளை சென்னை வரவழைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.