சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங்கை நீக்கும் நடவடிக்கையை சோனியா காந்தி எடுக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமை தன்னை அவமானப்படுத்தி விட்டதாக அமரீந்தர் சிங் குற்றம்சாட்டுகிறார். அவரை முதல்வர் பதவியில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா நீக்கவில்லை. ஒரு முதல்வர் 79 எம்எல்ஏக்களில் 78 எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்த பிறகு எப்படி அவர் அப்பதவியில் இருக்க முடியும்? முதல்வரை மாற்ற வேண்டும் என்று 78 எம்எல்ஏ.க்கள் தலைமைக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருந்தனர். எம்எல்ஏ.க்களின் கோரிக்கைகளை கேட்காமல் இருந்தால் எப்படி அவர்கள் பொறுப்பார்கள். பஞ்சாப்பில் முதன் முறையாக பட்டியலினத்தை சேர்ந்தவர் முதல்வராகி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.