கொடைக்கானலில் போதிய மழையால் பூண்டு விளைச்சல் இருக்கு...ஆனா விலையில்லையே: விவசாயிகள் கவலை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் முக்கிய விவசாய பயிராக வெள்ளைப்பூண்டு உள்ளது. இங்கு வெள்ளைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் போதிய மழை பெய்தது. இந்நிலையில், கொடைக்கானல் பகுதிகளில் தற்போது வெள்ளைப்பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. போதிய மழை இருந்த காரணத்தினால் கொடைக்கானலில் வெள்ளைப்பூண்டு மகசூல் அமோகமாக உள்ளது. கடந்த ஆண்டு வெள்ளைப்பூண்டுவிற்கு அதிகபட்ச விலை கிடைத்தது. ஒரு கிலோ பூண்டு ரூ.400 முதல் 500 வரை விற்கப்பட்டது.இதனால், கொடைக்கானல் மலைப்பகுதியில் குறிப்பாக பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை, மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, போளூர், உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் வரை பூண்டு பயிரிடப்பட்டு உள்ளது.

நல்ல மகசூலும் கிடைத்துள்ளது. ஆனால், கடந்தாண்டைவிட மிக மோசமான அளவிற்கு இந்தாண்டு பூண்டு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. புவிசார் குறியீடு பெற்ற பின்னரும் பூண்டு நிலையான விலைக்கு விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.மலைப்பகுதி விவசாயி விவேக் கூறியதாவது: கடந்தாண்டு நல்ல விலை கிடைத்த காரணத்தினால் மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் முழுவீச்சில் வெள்ளைப்பூண்டை பயிரிட்டோம். போதிய அளவு மழை இருந்ததால், நல்ல மகசூல் கிடைத்தது. ஆனால் கடந்தாண்டை விட மிக மோசமான நிலையில் ஒரு கிலோ பூண்டு 100 ரூபாய்க்கும் கீழ் விற்கப்படுகிறது. இதனால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு வெள்ளைப் பூண்டுக்கு அடிப்படை ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், என்றார்.

Related Stories: