தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 541 கிலோ குப்பைகள் அகற்றம்-குலசை கடற்கரையில் சுத்தப்படுத்தும் பணி

தூத்துக்குடி : தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் மீன் வளக்கல்லூரி மாணவர்கள் 541கிலோ குப்பைகளை சேகரித்து அகற்றினர்.தூத்துக்குடி மீன்வள கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் தினத்தை முன்னிட்டு தேசிய கடலோர ஆராய்ச்சி மைய நிதிஉதவியுடன் கடலோர பகுதிகளை தூய்மைப்படுத்தும் முகாம் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு, கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை வகித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைப்பதன் அவசியம் மற்றும் கடலோர பகுதிகளிலுள்ள குப்பைகளை அகற்றுவதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

தூய்மைப்படுத்தும் பணிகளை தூத்துக்குடி சப் கலெக்டர் சுருதன் ஜெய் நாராயணன் தொடங்கி வைத்து, தூய்மை விழிப்புணர்வு குறித்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து அவர், மாணவர்களோடு சேர்ந்து கடற்கரை பகுதிகளில் குப்பைகளை சேகரித்து அகற்றும் பணியில் ஈடுபட்டார்.தூய்மை பணியின் போது, முத்துநகர் கடற்கரை பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், பாலிதீன் கவர்கள், பழைய துணிகள், காகித கழிவுகள் என சுமார் 541 கிலோ குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டது.

இதில், பேராசிரியர் ஆதித்தன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

உடன்குடி : உலக கடற்கரை சுகாதார வாரத்தை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் கடல் காவல் நிலையத்திற்குட்பட்ட குலசேகரன்பட்டினம் கடற்கரை பூங்கா கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதில் கடல் காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன், திசையன்விளை பூச்சிகாடு ஜெயந்திநாதர் மரைன் கல்லூரி உதவி பேராசிரியர் இளையராஜா, விடுதி காப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கல்லூரி தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: