திருப்போரூர் ஒன்றியத்தில் 24 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

திருப்போரூர்: திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வருகிற அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் போன்றவை கடந்த 15ம் தேதி தொடங்கி கடைசி நாளான 22ஆம் தேதி நிறைவுற்றது. வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் கடந்த வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சனிக்கிழமை  மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்கள் தங்களது மனுவை வாபஸ் வாங்க அவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து ஏராளமானோர் நேற்று முன்தினம் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து திருப்போரூர் ஒன்றியத்தில் 2 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்கு 24 பேரும், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 112 பேரும், 49 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 201 பேரும் தற்போது களத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ள 50 ஊராட்சிகளில் 24 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அருங்குன்றம், காரணை, குண்ணப்பட்டு, கேளம்பாக்கம், மடையத்தூர், மேலையூர், முள்ளிப்பாக்கம், பொன்மார், தையூர் ஆகிய 9 ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெம்மேலி ஊராட்சியில் 4 பேர்களும், பெரிய விப்பேடு ஊராட்சி யில் 3 பேரும், பையனூரில் 2 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும், பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று அந்த ஊராட்சியில் உள்ள 6 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: