வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நேற்று(நேற்று முன்தினம்)  நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வட மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில்(நேற்று இரவு) புயல் சின்னமாக மாறியது. இந்த புயல் சின்னம் மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வடக்கு ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், கலிங்கம்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குலாப் புயல் கரையை கடக்கும் போது 75 கி.மீ. - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். குலாப் புயல் காரணமாக சென்னை துறைமுகத்தில் 2-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 1-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதேபோல் பாம்பன், நாகப்பட்டினத்திலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: