கே.சி.வீரமணி வீட்டில் பதுக்கிய 551 யூனிட் மணலுக்கு போலி ரசீது?.. பொதுப்பணித்துறை ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பத்தூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கடந்த 16ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீடு, அவரது உறவினர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீரமணி வீட்டில் ₹60 லட்சம் மதிப்பிலான 551  யூனிட் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கே.சி.வீரமணி அளித்த பேட்டியில், ‘‘வீட்டில் இருக்கும் மணலுக்கு என்னிடம் ரசீது உள்ளது’’ என்று கூறினார்.

வீட்டில் இருந்த மணலுக்கான ரசீதுகள் உண்மையானதா? அல்லது போலியாக தயாரிக்கப்பட்டதா? என ஆய்வு செய்து 2 நாட்களுக்குள் அறிக்கை வழங்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நேற்று கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, ரசீதுகளை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மணல் எப்போது அள்ளப்பட்டது? எந்த முகவரிக்கு மணல் வாங்கப்பட்டுள்ளது? போன்றவை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் மணல் கடத்தியது உண்மையானால், உடனடியாக கே.சி.வீரமணி மீது போலீசில் புகார் செய்து மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்படும்.

Related Stories: