கொடநாடு கொலை வழக்கில் கைதான மனோஜ்சாமி, சந்தோஷ்சாமியிடம் போலீசார் 10 மணி நேரம் விசாரணை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 23.4.2017ம் தேதி நள்ளிரவு 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பணம், முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதவிர, பங்களாவின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ்குமார் கடந்த 2017-ல் தற்கொலை செய்து கொண்டார். சிபிஐ, ஊட்டி போலீசாரின் விசாரணையில் கடந்த  4 ஆண்டாக வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்பேரில், இந்த 3 வழக்குகளும் கடந்த மாதத்தில் இருந்து மீண்டும் விசாரணை நடந்துவருகிறது. அந்த வகையில், கொலை-கொள்ளை வழக்கில் கைதான 10 பேரில் சயான்,  ஜம்சீர் அலி ஆகியோரிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து நேற்று, சந்தோஷ்சாமி மற்றும் மனோஜ்சாமி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பகல் 12.30 மணியளவில் விசாரணை தொடங்கி இரவு 10.30 வரை நடந்தது. அப்போது பல முக்கிய தகவல்களை 2 பேரும் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவர்கள் தவிர, சுரேஷ் என்ற ஒரு சாட்சியிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: