வேரோடு பெயர்த்தெடுக்கப்பட்டது மதுரை கலைஞர் நூலக கட்டிடம் அமையுமிடத்தில் மரங்கள் இடமாற்றம்: மறுநடவு செய்து 90 நாள் வளர்ச்சி கண்காணிக்க முடிவு

மதுரை: மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பில், ரூ.70 கோடி செலவில் ‘‘கலைஞர் நினைவு நூலகம்’’ அமைக்கப்பட உள்ளது. மதுரை - நத்தம் ரோட்டில் பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில்  நூலகக் கட்டிடம் அமையும் இடத்தில் 15 மரங்கள் உள்ளன. இந்த மரங்களை பொதுப்பணித்துறையினர் மேற்பார்வையில் அப்படியே வேருடன் பெயர்த்தெடுத்து, அருகிலேயே காலியிடங்களில் மறுபடியும் நடும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து மரங்களுக்கான மறுவாழ்வு அமைப்பின் திட்ட அலுவலர் ஓசை செய்யது கூறியதாவது: மதுரையில் கலைஞர் நூலகத்திற்கான கட்டிடம் அமையும் இடத்தில் வேம்பு, புங்கை, வெப்பாலை, வில்வம் உள்ளிட்ட 15 பழமையான மரங்கள் உள்ளன. இவற்றை இயற்கையான முறையில் மறுநடவு செய்யும் பணியை துவக்கியுள்ளோம். மரத்தை சுற்றி குழி எடுத்து, கிளைகளை லேசாக வெட்டி, சாணி தடவி, சணல் சாக்கு வைத்து கட்டி பாதுகாத்தோம். மரங்களைச் சுற்றிய பக்க வேர்களை தவிர்த்து, ஆணிவேர் அப்படியே இருக்கும் வகையில் பாதுகாத்து, அப்பகுதியில் இயற்கை உரங்கள் இடப்பட்டன. தற்போது இங்கு புதிய வேர்கள் கிளம்பியுள்ளன. 2 நாட்களுக்கு முன்பு அருகிலேயே குழி எடுத்து ஆற விடப்பட்டது. தாய் மண்ணுடன் பெயர்த்தெடுக்கப்பட்ட மரங்கள் அப்படியே அருகில் மாற்று இடத்தில் குழி எடுத்திருந்த இடங்களில் பொக்லைன் மற்றும் கிரேன் உதவியுடன் மறுநடவு செய்யப்பட்டு வருகிறது. 90 நாட்களுக்கு மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: