மநீம கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 15ம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு ஆய்வு வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதேபோல், செப்டம்பர் 25ம் தேதி வேட்புமனுவை திருப்பப்பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமமுகவிற்கு குக்கர் சின்னமும், மதிமுகவிற்கு பம்பரம் சின்னமும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்தநிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சி அமைப்புகளை வலுவாக்கி மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய முனைப்புடன் செயல்படும் மக்கள் நீதி மய்யத்திற்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்காக ‘டார்ச்லைட்’ சின்னம் வழங்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: