பாகிஸ்தானுடன் போரில் வெற்றி கொண்டாட்டம்: தஞ்சை விமானப்படை வீரர்கள் 700 கிமீ சைக்கிள் பயணம்

தஞ்சை: இந்தியா-பாகிஸ்தான் இடையே 1971ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதையொட்டி 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி தஞ்சை விமானப்படை தள வீரர்கள் 700 கி.மீ. சைக்கிள் பயணத்தை மேற்கொண்டனர்.

தஞ்சையிலிருந்து கடந்த 10ம் தேதி 16 வீரர்கள் அடங்கிய சைக்கிள் பயண குழு மகாபலிபுரம் வரை இப்பயணத்தை தொடங்கியது. தஞ்சை விமானப்படை தள கமாண்டர் கேப்டன் பி.ஏ.ஷா வாயுசேனா மெடல் கொடியசைத்து சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.

இக்குழுவினர் கும்பகோணம், சிதம்பரம், புதுச்சேரி வழியாக மகாபலிபுரம் வரை சென்று பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேளாங்கண்ணி வழியாக தஞ்சைக்கு நேற்று வந்தனர். இந்திய விமானப்படை வீரர்களின் தன்னலமற்ற தியாகம், அர்ப்பணிப்பு, இந்திய சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதி ஆகியவற்றுடன் போரில் வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் இந்த சைக்கிள் பயணம் அமைந்தது. போரில் வெற்றி பெற்று 50 ஆண்டு நிறைவு பெற்றதையடுத்து பொன்விழா ஆண்டாக ஒன்றிய அரசு இந்த ஆண்டை “ஸ்வர்ணிம் விஜய் வர்ஷ்” ஆக கொண்டாட முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நடந்த இந்த சைக்கிள் பயணம் நேற்று தஞ்சையில் நிறைவு பெற்றது.

Related Stories: