சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் இறந்தவர் உடலை சுடுகாட்டுக்கு ஆற்றில் இறங்கி தூக்கி செல்லும் அவலம்

பேராவூரணி:சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரியங்கோட்டை கிராமத்தில் கல்லனை கால்வாய் கிளை வாய்க்காலில் பாலம் இல்லாததால் சடலத்தை இறுதிச்சடங்கு செய்ய ஆற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி தூக்கி செல்லும் அவலத்திற்கு தமிழக முதல்வர் தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள விரியங்கோட்டை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியிலிருந்து இறந்தவர்களின் சடலத்தை, இவர்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு கல்லனை கால்வாய் கிளை வாய்க்காலின் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சடலத்துடன் ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும் அவலத்தை பல ஆண்டுகளாக அனுபவத்து வருகின்றனர்.

நேற்று முன்னாள் ராணுவ வீரர் ராக்கன் என்பவர் மகன் மகாலிங்கம் (50) என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இவரது சடலத்தை எரியூட்ட எடுத்து சென்றபோது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் பலமுறை மனுக்கொடுத்தும் பாலம் கட்டப்படவில்லை எனவும், தமிழக முதல்வர் உடனடியாக சிறப்புக்கவனம் செலுத்தி பாலம் கட்டித்தர வேண்டுமென ஆதிதிராவிடர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: