பிஎட் படிக்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் பிஎட் பட்டப்படிப்புகளில் சேர, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்கக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல்(பிஎட்) பட்டப்படிப்பில் இந்த கல்வி ஆண்டில் மாணவ-மாணவியர் சேர்க்கப்பட உள்ளனர். தகுதியுள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கல்லூரிக் கல்வி இயக்கக இணைய தளம்( www.tngasaedu.in, www.tngasaedu.org) மூலம் இன்று முதல் 22ம் தேதி வரை பதிவு செய்யலாம்.

இணைய  தளம் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவ-மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கல்வியியல் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யும்போது தங்கள் விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இணைய தளத்தின் மூலம் பதிவு செய்வதில் ஏதாவது சிரமம் இருந்தால், 044-28271911 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம். இது தவிர care@tngasaedu.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்கலாம். விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணங்களை டெபிட் கார்டு, கிரடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணைய தளம் வழியாக செலுத்தலாம். அப்படி செலுத்த முடியாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் , இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-6’ என்று பெயரில் 13ம் தேதிக்கு பிறகு பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

Related Stories: