திருச்செந்தூரில் இருந்து ஆசிரியரை கடத்தி ரூ.4.50 லட்சம் பறிப்பு சென்னை பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 6 போலீசார் மீது வழக்கு: மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் நடவடிக்கை

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குறிப்பான்குளம், குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன் (52). ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி ஜெபமங்களம். கடந்த 2020 அக்.23ம் தேதி சாலமோன் குடும்பத்தினருடன், உறவினர் திருமணத்திற்காக திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்புக்கு வந்தனர். அன்றிரவு சாலமோனை செல்போனில் தொடர்பு கொண்ட உறவினர் தினேஷ், முக்கியமான விஷயம் பேச வேண்டும் என வெளியே அழைத்துள்ளார்.

அதன்படி வெளியே வந்த சாலமோனை, வேனில் காத்திருந்த சென்னை வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, தனியார் நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயர் உள்பட 7 பேர் வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தினர். இதைப் பார்த்த தினேஷ் தடுக்க முயன்றார். அப்போது சிவக்குமார்,  ‘‘உனது தம்பி தேவராஜ் ரூ.21 லட்சம் தர வேண்டும். உன்னை கடத்தினால்தான் பணம் கிடைக்கும்” என்று சாலமோனிடம் கூறினார். வேன் 24ம் தேதி சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது. அங்கு அவரை விடுவிக்க ரூ.3 லட்சமும், வேன் வாடகை ரூ.1.50 லட்சமும் வேண்டும் என கேட்டுள்ளனர்.

இதையடுத்து சாலமோன் மனைவி புஷ்பராணியிடம் பேசி, சென்னையில் உள்ள அவரது சகோதரியின் கணவர் மூலம் போலீசாரிடம் ரூ.4.50 லட்சத்தை கொடுக்க ஏற்பாடு செய்தார். இதில் ரூ.3 லட்சம் நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு சாலமோன் விடுவிக்கப்பட்டார். இதுகுறித்து புஷ்பராணி, திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் எஸ்பி, டிஐஜிக்கும் மனு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சாலமோன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நிதிநிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயர், சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்ஐ ரமேஷ் கண்ணன் மற்றும் 4 போலீசார் ஆகிய 7 பேர் மீது ஆள் கடத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: