காஞ்சி மாவட்ட மகளிர் குழு பெண் தொழில் முனைவோருக்கான பயிற்சி முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமியில் மகளிர் குழுவை சார்ந்த பெண் தொழில் முனைவோர்களுக்கான 4 நாள் பயிற்சி நிறைவு விழாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தொழில் முனைவோருக்கு தலாரூ.3 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுவை சேர்ந்த பெண் தொழில் முனைவோர்களுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா, பெல்ஸ்டார் அமைப்பு மற்றும் சிறு தொழில் மேம்பாட்டு இந்தியா நிறுவனம் இனணந்து 4 நாட்கள் பயிற்சி நடத்தப்பட்டது. இதன் நிறைவு நாள் விழாவுக்கு ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக தலைவர் கல்பனா சங்கர் தலைமை தாங்கினார்.

மாவட்ட முதன்மை மேலாளர் ராமசாமி வரவேற்றார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். 4 நாள் பயிற்சியில் தொழில் முனைவோருக்கான வாடிக்கையாளர் வர்த்தக உறவை மேம்படுத்துதல், செய்யும் தொழிலில் ஏற்படும் சவால்களை சமாளித்தல், வலைதளங்கள் மூலம் விளம்பரங்கள் செய்வது, வர்த்தகப் பரிமாற்றம், வலைத்தளங்கள் மூலம் வியாபார விளம்பரங்கள் செய்தல், வர்த்தக உறவுகளை பெருக்குதல், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செயலி பயன்பாடு, தொழில்  முனைவோர் கடைபிடிக்க வேண்டிய நேர மேலாண்மை ஆகியவற்றை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் 64 பெண் தொழில்முனைவோர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பெல்ஸ்டார் மண்டல மேலாளர் பகவதி, மகளிர் குழுவை சேர்ந்த பெண்களில், தொழில் செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுவது குறித்து பேசினார். அப்போது, மகளிர் தொழில் செய்வதற்கான ஆலோசனைகளை வழங்க ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனம் தயாராக இருக்கிறது. சிறப்பாக தொழில் செய்யும் மகளிருக்கு அதிக கடன் வழங்க பெல்ஸ்டார் நிறுவனம் தயாராக உள்ளது. அதிக தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களது பொருளாதார முன்னேற்றத்தை உயர்த்துவதே இந்த பயிற்சியின் நோக்கம் என தெரிவித்தார்.

பயிற்சி நிறைவு விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அகாடமி இயக்குநர் சந்திரசேகர், தேர்ந்தெடுக்கப்பட்ட 2 தொழில் முனைவோர்களுக்கு தலாரூ.3 லட்சம் கடனுதவி வழங்கினர். நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொழில் மேம்பாட்டுப்பிரிவு பயிற்சியாளர் ஸ்வப்னா, மேலாளர் பிரபாவதி மற்றும் ,ஜோசப், ராமசாமி, சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: