திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

*கலெக்டர் வழங்கினார்

*மாவட்டத்துக்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில், டாக்டர் ராதா கிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு கலெக்டர் பா.முருகேஷ் விருது வழங்கினார்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, சீ.கிருபானந்தம், தலைமை ஆசிரியர், கீழ்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி. அ.முருகையன், பட்டதாரி ஆசிரியர், வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. டி.விஜயலட்சுமி, பட்டதாரி ஆசிரியர், கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இரா.தமிழ்கனி, பட்டதாரி ஆசிரியர், குப்பனத்தம் அரசு உயர்நிலைப்பள்ளி. கி.முருகன், பட்டதாரி ஆசிரியர், மல்லவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.

ம.ரகு, பட்டதாரி ஆசிரியர், வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஜேம்ஸ் எட்வர்ட்தாஸ், தலைமை ஆசிரியர், மண்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ஜெ.பரந்தாமன், தலைமை ஆசிரியர், கூட்டாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. து.மோகன்ராஜ், தலைமை ஆசிரியர், சு.வாளவெட்டி ஆதி திராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளி. கோ.சேட்டு, தலைமை ஆசிரியர், காட்டுவானத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.

இரா.அசோகன், தலைமை ஆசிரியர், ந.மோட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. மூ.கேசவன், தலைமை ஆசிரியர், கீழாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. க.கோவேந்தன், தமிழாசிரியர், செய்யாறு இந்தோ அமெரிக்கன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடு காரணமாக, மாநில அளவில் விருது வழங்கும் விழா நடைபெறவில்லை. கடந்த 5ம் தேதி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 5 ஆசிரியர்களுக்கு மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார். அதைத்தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் கலெக்டர்கள் மூலம் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. அப்போது, 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான பதக்கம், நற்சான்றிதழ் மற்றும் ₹10 ஆயிரம் ஆகியவற்றை கலெக்டர் பா.முருகேஷ் வழங்கி கவுரவித்தார்.

அப்போது, கலெக்டர் பேசுகையில், ஆசிரியர்களின் பணி போற்றத்தக்கது. கற்பித்தல் பணி மட்டுமின்றி சமூகத்துடன் தொடர்புடைய தேர்தல் பணி, விழிப்புணர்வு பணி போன்றவற்றில் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக ஆர்வத்துடனும், விருப்பத்துடன் கற்பித்தல் பணியில் ஈடுபட்டதன் மூலம் நல்லாசிரியர் விருதை பெற்று, 13 ஆசிரியர்களும் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில், எஸ்பி பவன்குமார், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப், டிஆர்ஓ முத்துக்குமாரசாமி, முதன்மைக் கல்வி அலுவலர்(கூடுதல் பொறுப்பு) கிருஷ்ணபிரியா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: