நாமக்கல்லில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவனை கொன்ற மனைவி: குடும்ப தகராறில் வெறிச்செயல்

நாமக்கல்: நாமக்கல்லில், குடும்பத்தகராறில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் ஏ.எஸ். பேட்டையைச் சேர்ந்தவர் தங்கராஜ்(50), கூலித்தொழிலாளி. இவரது மனைவி செல்வராணி(45). கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2ம் தேதி மாலை நாமக்கல் அரசு மருத்துவமனையில் தங்கராஜ் உடல் முழுவதும் 90 சதவீதம் தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும், நாமக்கல் 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கபாலீஸ்வரன், அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து, தங்கராஜிடம் மரண வாக்குமூலம் வாங்கினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். குடும்பத்தகராறில் மனைவி செல்வராணி, தனது கணவர் தங்கராஜ் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் நேற்று காலை செல்வராணியை கைது செய்தனர். குடும்பத்தகராறில் கணவனை மனைவியே கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொன்ற சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: