சென்னை : பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் ட்விட்டரில் பெரியாரின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இன்று காலை விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு ஆகிய இரண்டும்தான் பெரியாரின் இலக்குகளாக இருந்திருக்கின்றன என்றும் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இன்று இந்தியா முழுமைக்கும் சமூகநீதிக் கருத்துகள் விதைக்கப்பட்டுள்ளதற்கு அடித்தளமாக இருந்த பெரியாரை போற்றும் விதமாக சமூக நீதி நாள் கொண்டாடப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.