நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறப்படும் : தமிழக அரசு திட்டவட்டம்!!

சென்னைசட்டபேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மக்கள் நல்வாழ்வு துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:தமிழக அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. மருத்துவ படிப்பிற்கான இடங்கள் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு முதல்வர் 5.6.21 அன்று, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை குழு ஒன்று அமைத்து ஆணையிட்டார்.

இந்த குழு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை அடிப்படையாக கொண்ட மருத்துவ மாணவர்கள் சேர்க்கை முறை, சமூக, பொருளாதார மற்றும் கூட்டாட்சி முறையினை மோசமாக பாதிக்கிறதா என்பதையும் மேலும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழை, எளிய மாணவர்கள், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தமிழ்வழி கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது வேறு பிரிவு மாணவர்களை பாதிக்கிறதா என்பதையும் அவற்றை களைய எடுக்கப்பட வேண்டிய தகுந்த முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து தகுந்த ஆய்வு செய்து தனது பரிந்துரைகளை 14.7.21 அன்று அரசுக்கு சமர்பித்துள்ளது.

உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்து அதனை செயல்படுத்தும் பொருட்டு, தலைமை செயலாளரின் தலைமையில் உயர் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, மருத்துவ கல்வி சேர்க்கையின் அனைத்து நிலைகளிலும் ‘நீட்’ தேர்வை புறந்தள்ளுவதற்கு, தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007-ஐ போன்றதொரு புதிய சட்டத்தை இயற்றி, குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற முயற்சிக்கலாம் என பரிந்துரைத்தது. இது, மருத்துவ கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை பாதுகாப்பதை உறுதி செய்யும்.

மருத்துவ முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் உயர் சிறப்பு படிப்புகளுக்கு, மாநிலத்துக்கான 50 விழுக்காடு இடங்களில் உள்ஒதுக்கீடாக 50 விழுக்காடு இடங்களை தமிழ்நாடு அரசில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிஎம்/எம்சிஹெச் உயர் சிறப்பு படிப்புகளுக்கான அரசாணை சென்னை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Related Stories: