சென்னை: இலங்கை தமிழர் நலனுக்காக 317 கோடி நிதி ஒதுக்கியதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக, ரேஷனில் இலவச அரிசி, கியாஸ் இணைப்பு உள்ளிட்டவை வழங்குவதற்காக 317 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக சட்டசபையில் 110 விதியின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான அந்நாட்டு பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நடப்பு நிதி நிலைக் கூட்டத் தொடரின்போது இலங்கை தமிழர்களின் நலனுக்காக 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதற்காக நன்றி தெரிவித்தார்.