தென்தாமரைக்குளம்: கன்னியாகுமரி எம்.பி.யும், காங்கிரஸ் செயல் தலைவரும், வசந்த் அன் கோ நிறுவன தலைவருமாக விளங்கிய எச்.வசந்தகுமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த பகுதியில் அவரது நினைவாக மணிமண்டபம் எழுப்பப்பட்டு அங்கு அவருக்கு சிலையும் நிறுவப்பட்டுள்ளது. அவரது முதலாம் ஆண்டு நினைவு தினமான நேற்று காலை மணிமண்டபம் மற்றும் சிலை திறப்புவிழா அகஸ்தீஸ்வரத்தில் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்து மணி மண்டபம், சிலை ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார். பின்னர் கே.எஸ்.அழகிரி, எச்.வசந்தகுமார் நினைவிடத்திலும், அவரது திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்து நேரலையில் கலந்துகொண்டு வசந்தகுமாருக்கு புகழாரம் சூட்டினார்.