கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த 247 கிலோ குட்கா பறிமுதல்

சின்னாளபட்டி: கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்தி வந்த 247 கிலோ குட்கா மற்றும் புகையிலையை சின்னாளபட்டி அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்பாத்துரை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் இன்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதிகாலை 5.30 மணியளவில் கார் ஒன்று வந்துள்ளது. வெள்ளோடு பிரிவு அருகே போலீசாரை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்திவிட்டு அருகிலுள்ள டீக்கடைக்கு சென்றுவிட்டனர்.

போலீசார் காரில் பார்த்த போது 16 மூடைகள் இருந்தது தெரியவந்தது. மூடைகளை பிரித்து பார்த்தபோது, தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை 247 கிலோ இருந்ததும், கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காருடன் குட்கா மற்றும் புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த ரேவன்குமார் (35), கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (32), தேவராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: