ஓசூர்: வரலட்சுமி நோன்பு எதிரொலியாக ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை நேற்று கடுமையாக உயர்ந்தது. குண்டுமல்லி கிலோ 2 ஆயிரத்துக்கும், கனகாம்பரம் கிலோ 1,600க்கும் விற்பனையானது. இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.நாடு முழுவதும் இன்று(20ம் ேததி) வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது. ஓசூர் பகுதியில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் அதிக அளவில் இருப்பதால், இங்கு வரலட்சுமி நோன்பு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஓசூர் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் வரலட்சுமி நோன்பு விற்பனையை எதிர்நோக்கி விளைவித்த பூக்களை நேற்று மார்க்கெட்டில் குவித்தனர். பெங்களூரு, சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வரலட்சுமி நோன்பு விற்பனைக்காக பூக்களை வாங்க ஓசூரில் குவிந்தனர். இதனால் பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பூக்களை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.