சென்னை: மாநகராட்சிக்கு உட்பட்ட நீர்வழிக் கால்வாய்களில் நவீன இயந்திரங்களைக் கொண்டு கடந்த 15 நாட்களில் 687 மெட்ரிக் டன் ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் மிதக்கும் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இயந்திரப் பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீர் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்கள் உதவியுடன் நீர்நிலைகளில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.