சேலம்: வடகிழக்கு பருவமழை எதிரொலியால், சேலத்தில் இருந்து பட்டாம்பூச்சிகள் மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி இடம் பெயர தொடங்கியுள்ளது என பட்டாம் பூச்சி ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஜூன் தொடங்கி செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும். இந்த காலகட்டத்தில் பெய்யும் கனமழையானது, பட்டாம் பூச்சிகளின் வாழ்வியலை அழித்து விடும். இதனால் தென்மேற்கு பருவமழை காலத்திற்கு முன்பே, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையை நோக்கி பட்டாம் பூச்சிகள் இடம் பெயரும். அதேபோல் வடகிழக்கு பருவமழை காலத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயரும் நிகழ்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை காலத்தில் பட்டாம் பூச்சிகளின் இடம்பெயர்வு முன்கூட்டியே நடந்து வருகிறது. நடப்பாண்டில், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, கோவை, நீலகிரி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை உள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு பட்டாம் பூச்சிகள் இடம் பெயர்ந்தது. தற்போது, தென்மேற்கு பருவமழை காலம் முடியும் நிலையில், மீண்டும் பட்டாம் பூச்சிகள் கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை நோக்கி இடம் பெயர தொடங்கியுள்ளது.