இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோயில்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மேம்பாடு குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் அமைச்சர் பேசியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரிகள் மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரியில் அடிப்படை தேவைகள், மாணவர்களின் சேர்க்கை, கல்வி தரம் மேம்படுத்தப்படும்.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள் விரைவில் தங்களுடைய பள்ளிகளுக்கு தேவையான செயல்முறை திட்டத்தை தயார் செய்து ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளில் சாரணர் இயக்கம், நாட்டு நலப்பணி திட்ட இயக்கம் போன்ற சமூக அமைப்புகளை ஏற்படுத்தி, அதில் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தமாக வைக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களை மேம்படுத்த சிறந்த கல்வியாளர்களை கொண்டு ஆலோசனை மேற்கொள்ளப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சுயநிதி பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பணிநியமனம் மற்றும் ஊதியம் முரண்பாடின்றி ஒரே மாதிரியாக வழங்கப்படும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குரிய பணிமூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திரன், கல்வியாளர் அஜித்பிரசாத் ஜெயின்  மற்றும் கோயில் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: