நாகர்கோவில் : குமரி மாவட்ட சிவாலயங்களில் மராமத்து பணிகள் நடந்ததில் ரூ.3.48 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் அறநிலையத்துறை இணை ஆணையர் உள்பட 4 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்பில் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்கள் உள்ளன. சிவராத்திரி விழாவின் போது மராமத்து பணிக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யும். அதன்படி கடந்த 20.2.2020, 21.2.2020ல் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிவாலயங்களில் மராமத்து பணிக்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது. அந்த வகையில் திற்பரப்பு மகாதேவர் கோயில், திருமலை மகாதேவர் கோயில்களில் பல்வேறு பணிகள் நடந்ததாக கூறி ரூ.3.48 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது.