உளறி கொட்டிய முகுல்ராய் இடைத்தேர்தலில் பாஜவுக்கே வெற்றி: திரிணாமுல் அதிர்ச்சி

கொல்கத்தா: சமீபத்தில் திரிணாமுல் கட்சியில் இணைந்த மூத்த தலைவர் முகுல் ராய், ‘வரும் இடைத்தேர்தலில் பாஜ நிச்சயம் வெற்றி பெறும்’ என கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல் ராய், கடந்த 2019ல் மம்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து விலகி பாஜ.வில் சேர்ந்தார். இரண்டரை ஆண்டுகள் பாஜ.வில் இருந்த அவர் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கிருஷ்ணாநகர் வடக்கு தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்ததும், அக்கட்சியில் அவர் இணைந்து விட்டார்.

இந்நிலையில்,  திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த ்வர், ‘‘வரும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாஜ நிச்சயம் வெல்லும். திரிபுராவிலும் வெற்றி பெறும். இதில் சந்தேகமில்லை’’ என்றார். இதைக் கேட்ட கட்சி நிர்வாகிகள், செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு தனது தவறை உணர்ந்த முகுல் ராய், ‘‘இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெல்லும், திரிபுராவிலும் திரிணாமுல் வெற்றிக் கணக்கை தொடங்கும்,’’ என்றார்.இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து பாஜ செய்தி தொடர்பாளர் சமிக் பட்டார்ச்சார்யா கூறுகையில், ‘‘முகுல் ராய் தெரியாமல் உண்மையை  பேசிவிட்டார். அவர் கூறியதுதான் நடக்கப் போகிறது. அவர், கிருஷ்ணாநகர் தொகுதி மக்களை ஏமாற்றி விட்டார்,’’ என்றார்.

Related Stories: