சித்தூர் : சித்தூர் அருகே 1000 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2,500 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் வெதுருகுப்பம் மண்டலத்திற்குட்பட்ட காவல் நிலையத்திற்கு அருகே வனப்பகுதியொட்டி அமைந்துள்ள கிராமங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. அதன்பேரில் வெதுருகுப்பம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ரோந்துச்சென்றனர். அப்போது வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்த மர்ம நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள் வனப்பகுதியில் தப்பியோடி மறைந்தனர். இதையடுத்து அங்கிருந்த ஆயிரம் லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக வைத்திருந்த 2,500 லிட்டர் ஊறலை போலீசார் கைப்பற்றி தரையில் ஊற்றி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச வைத்திருந்த வெல்லம் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், கள்ளச்சாராயம் காய்ச்சுவது, விற்பனை செய்வது சட்ட விரோதமாகும். எனவே இது போன்ற சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். தப்பியோடியவர்களை மிக விரைவில் கைது செய்வோம் என்றனர்.