தஞ்சையில் தடையை மீறி உண்ணாவிரதம் பாஜகவை கொச்சைப்படுத்தினால் அடிப்படையிலேயே கை வைப்போம்: மிரட்டும் அண்ணாமலை

தஞ்சை: மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை கண்டித்து பாஜக சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன் நேற்று பாஜ சார்பில் உண்ணாவிரத போராட்டம் போலீஸ் தடையை மீறி நடந்தது. மாநில தலைவர்  அண்ணாமலை தலைமை வகித்து பேசியதாவது:- கமல் அரசியல் நடிப்புக்கு வந்துவிட்டார். மய்யம் என்று பெயர் வைத்துக்கொண்டு மையம் இல்லாமல் பேசி வருகிறார். அவருடன் இருந்தவர்கள் எல்லாம் வெளியே போய் விட்டனர். இவர் மட்டுமே தற்போது உள்ளார். கடந்த தேர்தலிலேயே மக்கள் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.  

கர்நாடகாவில் ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் அனைத்து அமைப்பினரும் சேர்ந்து மேகதாது அணை கட்டுவோம் என்று கூறி வருகிறார்கள். மேகதாது அணை கட்டினால் கண்டிப்பாக தமிழக பாஜக எதிர்க்கும். தமிழக அரசியலில் யாராவது பாஜகவை கொச்சைப்படுத்தினால் விடமாட்டோம். மீறி பேசினால் அவர்களின் பிசினஸில், அடிப்படையில் கையை வைப்போம். அவர்களுக்கு பதிலடியை சம்மட்டி அடிபோல கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உட்பட பலர் பங்கேற்றனர். வழக்குபதிவு: போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை உள்பட 700 பேர் மீது தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories: