சேலத்தில் பயங்கரம் பேஸ்புக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி: தீர்த்துக்கட்டியது பற்றி பரபரப்பு வாக்குமூலம்

சேலம்:  சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் பிரபு (39). இவர் போலீஸ் ஸ்டேசன் அருகில் வாழை இலைக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ஷாலினி (22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. கடந்த 2ம்தேதி நள்ளிரவு வீட்டில் மர்மமான முறையில் பிரபு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். ஷாலினியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது, பேஸ்புக்கில் அவருடன் தொடர்பில் இருந்த திருச்சி மாவட்டம் துறையூர் சிங்களாந்தபுரம் தெக்கியூரை சேர்ந்த அப்பு (எ) காமராஜ் (23) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலை அவரை போலீசார் கைது செய்து சேலம் அழைத்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. ஷாலினி கல்லூரியில் படிக்கும் போது இருவரை காதலித்துள்ளார். அதில் ஒருவர் செல்போன் வாங்கி கொடுக்கவே அவருடன் ஷாலினி வீட்டைவிட்டு ஓடிவிட்டார். பின்னர் பெற்றோர் அவரை தேடி அழைத்து வந்து தாய் மாமன் பிரபுவுக்கு திருமணம் செய்து வைத்தனர். இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம் இருந்தது.

இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் ஷாலினி பேஸ்புக்கில் தனது கவனத்தை திருப்பினார். இதில் பலருடன் பேசி பழகியுள்ளார். அப்போதுதான் துறையூர் வாலிபர் அப்புவுடன் தொடர்பு ஏற்பட்டது. பேஸ்புக்கில் பேசி வந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஷாலினியின் தாய் வீடு நாமக்கல்லில் உள்ளது. தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு, அவரை பார்க்க சென்று தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து பிரபுவை தீர்த்துக்கட்டிவிட்டு இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். சம்பவத்தன்று அப்புவை  வீட்டுக்கு வரழைத்த ஷாலினி, மொட்டை மாடியில் தண்ணீர் டேங்க் அருகில் பதுங்க வைத்துள்ளார்.  

இரவு 10 மணிக்கு வேலை முடிந்து வந்த பிரபு சாப்பிட்டு தூங்கியதும் அப்புவை அழைத்து தலையணையால் முகத்தை அமுக்கி கொன்றுள்ளனர். திருடர்கள் கொன்றதுபோல காட்ட பிரபு அணிந்திருந்த தங்க சங்கிலியையும், மோதிரத்தையும் அப்பு எடுத்து சென்றுள்ளார். இந்த விவரங்களை அப்புவும், ஷாலினியும் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: