வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக 15 லட்சம் மோசடி: கணவன் கைது: மனைவிக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் கண்ணன்(53). தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலமாக வீடு வாங்குவதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இதையறிந்த திருவள்ளூர் அடுத்த மணவாள நகர், கண்ணையா நகர், சம்மந்தனார் தெருவை சேர்ந்த பவுல்ராஜ்(54), தன் மனைவி ஞானரோஸ்லினுடன், கண்ணனை சந்தித்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் தனது உறவினர்கள் பெரிய பதவில் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு வாங்கி தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதற்காக 2 லட்சத்து 50 ஆயிரம் உடனடியாக கொடுத்தால் வீடு பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர். இதை உண்மை என்று நம்பிய அவர் 2 லட்சத்து 50 ஆயிரத்தை பவுல்ராஜிடம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பவுல்ராஜ் தன் மனைவியுடன் சேர்ந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வழங்கியதைப்போல் போலியான குடியிருப்பு அனுமதி சீட்டு மற்றும் மாற்று இடம் வழங்கிட அடையாள சீட்டு ஆகியவற்றை தயார் செய்து உண்மை போல் கண்ணனிடம் கொடுத்துள்ளனர். அதைப் பெற்றுக்கொண்டு விசாரித்தபோது அது போலியான அனுமதி சீட்டு என்பதை அறிந்த கண்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல், கணவன், மனைவி இருவரும் கூட்டு சேர்ந்து மேலும் 5 பேரிடம் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி 12 லட்சத்து 50 ஆயிரம் என மொத்தம் 15 லட்சம் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி அசோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  இதுதொடர்பாக திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த பவுல்ராஜை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மனைவி ஞானரோஸ்லினை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: