திருவாரூர் மாவட்டத்தில் 1.37லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி: களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது களை எடுப்பது மற்றும் அடியுரம் இடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 16 கோடி மதிப்பில் ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளது. மேலும் ஜூன் 12 ம்தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துள்ளதையடுத்து குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனை் நிலையில் தற்போது களை எடுப்பது மற்றும் அடியுரம் இடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தொகுப்பு திட்டம், பயிர் கடன் போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் இந்த தொகுப்பு திட்டத்திற்கு என ரூ 12 கோடியே 52 லட்சத்து 70 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு 100 சதவிகித ரசாயன உரம் மானியமாக 1551 டன் யூரியா, டிஏபி 862 டன், 430 டன் பொட்டாஷ் என மொத்தம் 2 ஆயிரத்து 843 டன் உரங்கள் 17 ஆயிரத்து265 ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி யூரியா 4 ஆயிரத்து 100 டன்னும், டிஏபி 3 ஆயிரத்து944 டன்னும், பொட்டாஷ 2 ஆயிரத்து710 டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 2 ஆயிரத்து 311 டன் என மொத்தம்13 ஆயிரத்து 115 மெட்ரிக் டன் உரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: