மாமூல் கேட்டு மிரட்டியதால் ரவுடியை கழுத்தறுத்து கொலை செய்தோம்: கைதான வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம்

புழல்: செங்குன்றம் அடுத்த ஜோதி நகரை சேர்ந்தவர் சண்முகப்பாண்டியன்(26). செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில், கஞ்சா கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு, பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.  பிரபல ரவுடியான இவர், கடந்த 28ம் தேதி காலை செங்குன்றம் அடுத்த  நல்லூர் சுங்கச்சாவடி பின்புறம் உள்ள முட்புதரில், மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். புகாரின்பேரில்,  மாவட்ட எஸ்பி வருண்குமார், பொன்னேரி டிஎஸ்பி கல்பனா தத், சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் சம்பவ இடத்தில், கைப்பற்றிய 4 வீச்சரிவாள்கள், 1 செல்போன் ஆகியவற்றை கொண்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், செங்குன்றம் நாரவாரிக்குப்பம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(26), பொத்தூர் பகுதியை சேர்ந்த வேலு (எ) முருகன்(26) ஆகியோர் சோழவரம் காவல்நிலையத்தில் கடந்த 28ம் தேதி சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில், நாங்கள் கஞ்சா, போதை மாத்திரைகள் ஆகியவற்றை பாடியநல்லூர் மகாலட்சுமி நகரை சேர்ந் பிரிதிவிராஜ்(23) என்பவருடன் சேர்ந்து விற்றுவந்தோம்.  எங்களிடம், சண்முகபாண்டியன் மாமூல் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும், மாமூல் தர மறுத்தால் போலீசில் காட்டிக்கொடுத்துவிடுவேன் என மிரட்டினார்.

இதனால், சம்பவத்தன்று மாமூல் தருவதாக கூறி, அவரை வரவழைத்தோம். பின்னர், அவரை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தோம். குடிபோதையில் அவர் தள்ளாடியபோது, மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால் கழுத்தை அறுத்து கை, கால் என வெட்டி கொலை செய்து, முட்புதரில் சடலத்தை வீசிவிட்டு சென்றோம், என தெரிவித்தனர். இதனையடுத்து, பிரிதிவிராஜையும் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: