ஊசூரில் புதிதாக 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல் நிலை நீர்தேக்க தொட்டிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்-ஆய்வு செய்த பிடிஓ தகவல்

அணைக்கட்டு : அணைக்கட்டு தாலுகா வேலூர் ஒன்றியத்திற்குட்ட ஊசூர் ஊராட்சி திரவுபதியம்மன் நகர், அருந்ததியர் காலனி உள்ளிட்ட பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நீர் ஏற்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. மின் மோட்டர்கள் பழுது, பைப் லைன் சேதம் உள்ளிட்ட காரணங்களால் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து குடிநீர் வழங்குவது நிறுத்தப்பட்டது.

இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சரிவர குடிநீர் கிடைக்காமல் கடந்த 5 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து கடந்த 25ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன்எதிரொலியாக வேலூர் பிடிஓ கனகவல்லி, பொறியாளர் வசந்தி, ஓவர்சியர் சுப்பிரமணி மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 2 மேல்நிலை தொட்டிகளையும் உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி செயலாளர் வெங்கடேசனுக்கு பிடிஓ உத்தரவிட்டார்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘சிவநாதபுரம் செல்லும் சாலையில் போடப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும், அருந்ததியர் பகுதி மக்களுக்காக கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கும் தனியாக 2 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர் தேக்கதொட்டிக்கு தண்ணீர் ஏற்றி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்’ என்றனர்.

Related Stories: