காதலியை மிரட்டி பலாத்காரம்: வாலிபர் கைது

பெரம்பூர்: சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் குமாரி (21,  பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும், கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த  நவீன் டேனியல் அசோக்குமார் (25)  என்பவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் நவீன் டேனியல் அசோக்குமார், குமாரியை வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவரும் தங்கியிருந்த விடுதியில், குமாரியை கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் நவீன் டேனியல் அசோக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதன்பிறகு திருமணம் செய்து கொள்வதாக குமாரியிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் நவீன் டேனியல் அசோக்குமாருக்கும், வேறு பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த குமாரி, இதுதொடர்பாக நவீன் டேனியல் அசோக்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், “உன்னை 2வதாக திருமணம் செய்துகொள்கிறேன்” என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரி, என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை திருமணம்  செய்வதா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குமாரி புகார் செய்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் நசீமா, பாலியல் பலாத்காரம், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நவீன் டேனியல் அசோக்குமாரை கைது செய்தார். பின்னர்,  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Related Stories: