விருதுநகர் மாவட்டத்தில் காவல் உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க 3,096 பேருக்கு அழைப்பு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் காவலர் உடல் தகுதித்தேர்வில் பங்கேற்க 3,096 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் இரண்டாம் நிலைக்காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை காவலர் காலிப்பணியிடங்களுக்கு எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு முதல் கட்ட உடல் தகுதித்தேர்வு நேற்று (ஜூலை.26) துவங்கி ஆக.3 வரை நடைபெற உள்ளது.

விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் முதல் கட்ட உடல் தகுதித்தேர்வு நேற்று துவங்கியது. ஜூலை 26 முதல் ஜூலை 30 வரை 2,228 ஆண்களும், ஆக.2 மற்றும் 3 தேதிகளில் 868 பெண்களும் என மாவட்டத்தில் இருந்து மொத்தம் 3,096 பேர் முதற்கட்ட உடல் தகுதி தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தினசரி 500 நபர்கள் வீதம் உடல் தகுதித்தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர். உடல் தகுதித்தேர்வில் கலந்து கொண்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பிறகு உயரம், மார்ப்பு விரிவடைந்த நிலையில் அளவீடு செய்யப்பட்டது. உரிய உயரம் மார்பளவு உடையவர்கள் 1,500 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். காவலர் தேர்வை மதுரை சரக துணைத்தலைவர் காமினி பார்வையிட்டார். மாவட்ட எஸ்பி மனோகரன் மற்றும் உயரதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: