திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி : அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்!!

சென்னை : சென்னை, நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகக் கூட்ட அரங்கில் திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில் பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு,  மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கீதா ஜீவன்  அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கோயில்களில் கடந்த பல ஆண்டுகளாக உழவாரப்பணிகள் செய்ய ஆர்வம் உள்ள தன்னார்வல குழுக்கள் மூலமாக பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனை எளிமைப்படுத்தும் வகையில் இணையவழி மூலம் பதிவு செய்யும் வசதி www.hrce.tn.gov.in சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருக்கோயில்களில் உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ள நபர்கள் எளிய முறையில் தங்களுக்கு உகந்த தேதி, நேரம், செய்யும் பணியினைத் தாங்களே தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து உரிய அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம்.

திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் இணையவழி மூலம் பதிவு செய்யும் முறை

இந்து சமய அறநிலையத்துறையின் இணைய வழி முகவரியான https://hrce.tn.gov.in க்குள் சென்று

1. இ-சேவைகள் பகுதியை தேர்ந்தெடுக்கவும்  

2. அதில் உழவாரப்பணி தேர்ந்தெடுக்கவும்

3. திருக்கோயில் பட்டியலில் விருப்பமான திருக்கோயிலினை தேர்ந்தெடுக்கலாம்.

4. தங்களுக்கு உகந்த தேதியினை அட்டவணையிலிருந்து தேர்ந்தெடுக்கவும்

5.நேரம், உழவாரப்பணி மற்றும் முன் பதிவு செய்யப்படாத சீட்டினை தேர்ந்தெடுக்கவும்

6. பணி செய்ய விரும்புபவரின் விவரங்கள் பூர்த்தி செய்யவேண்டும்.

7. பணி செய்ய விரும்புபவரின் விவரங்கள் :

உழவாரப்பணி செய்யும் தேதி / நேரம், மாநிலம்*, மாவட்டம்*, பெயர்*, அடையாள வகை*, சான்று எண், பாலினம்*, வயது*, பழைய கதவு எண்/ புதிய கதவு எண், இருப்பிடம், கிராமம் / நகரம் / மாநகரம் - பெயர், அஞ்சல் குறியீடு, மின்னஞ்சல், கைபேசி எண்*, பணிவகைத் தேர்வு, அங்கீகார மதிப்பு* (சிணீஜீtநீலீணீ), விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்வையிட்டு நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என சமர்ப்பிக்க வேண்டும்.

உழவாரப்பணி செய்ய விரும்புபவரின் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்பு பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் கடவுச்சொல் மற்றும் அங்கீகார மதிப்பினை*  உள்ளிடவும்.

மேற்கண்ட விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்பு அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் தங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கும் அனுமதிச்சீட்டின் பிரதி ஒன்று அனுப்பப்படும், தவிர இ-சேவை பகுதியில் இ-டிக்கெட் பதிவிறக்கம் பகுதியில் சென்று தங்களுடைய பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியினை பயன்படுத்தி அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் உண்டு.

முன்பதிவு செய்யப்பட்ட உழவாரப் பணியினை உரிய தேதியில் தங்களால் செய்ய இயலாத நிலை ஏற்படின் இ-சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்த நபர்களே தங்களது அனுமதியினை ரத்துசெய்ய வேண்டும்.

முதல் கட்டமாக 47 முதுநிலை திருக்கோயில்களுக்கு இச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து  படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நிகழ்வின்போது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு. ஷம்பு கல்லோலிக்கர் இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (நிர்வாகம்), திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப.,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குநர் திருமதி த.ரத்னா இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் (விசாரணை) திருமதி ந.திருமகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: